Search This Blog

Thursday, November 25, 2010

ஜெயலலிதாவும் -கம்யூனிஸ்டுகளும்

பழைய ஞாபகம்; இல்லையோ!
 திருமங்கலம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் வாக்கு கேட்கும்போது - தி.மு.க. மீது கடுமையாக பாய்ச்சல் நடத்துகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. பற்றியும், அதன் தலைவி ஜெயலலிதா பற்றியும் சுமார் இருபது மாதங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களும், அதே காலக் கட்டத்தில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி உதிர்த்த சில கருத்துக்களும் - இங்கே தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. அதனைப் படித்துப் பார்த்தால் நம் எண்ணத்தில் தோன்றுவது யாருக்கும் ஞாபகமில்லையோ! என்பதுதான்.

***

மதுரைமேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராசன் பேசியது. (தீக்கதிர் - 19-6-2007)

மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் இந்தியாவின் - தமிழகத்தின் அரசியல் அதிகாரம் எந்தத் திசை வழியில் செல்ல வேண்டும் என்பதற்கான தேர்தல். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.க. 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருவோம் என வாக்குறுதி தந்த போது அதை ஜெயலலிதா கேலி பேசினார். தி.மு.க. வாக்குகள் பெறுவதற்காக இப்படி வாக்குறுதி தருவதாக கூறினார். பின் அவரே சில நாட்களில் 20 கிலோ அரிசி தருவதாக அந்தர் பல்டி அடித்தார். ஆனாலும் அவர் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். அப்படிப்பட்ட அ.தி.மு.க.தான் மேற்குத் தொகுதியில் வாக்கு கேட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீலகிரியில் 800 ஏக்கர் சொகுசு பங்களாவில் தங்கியிருந்ததாக தொடர்ந்து செய்தி வருகிறதே, அதற்கு அவர் பதில் அளிக்க வேண்டாமா? நில உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் 50 ஏக்கர் நிலத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்ற நிலையில் ஜெயலலிதா எப்படி 800 ஏக்கர் நிலத்தில் பங்களா கட்டினார்? என்ற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்.


கடந்த 12 மாதங்களாக மைனாரிட்டி தி.மு.க. அரசை தொலைத்தே தீருவேன் என ஜெயலலிதா பேசி வருகிறார். ஒரு கட்சியை அழிக்கவா தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்காகவா கட்சி கொள்கை வைத்துள்ளது?

17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என அ.தி.மு.க. கூக்குரல் இடுகிறது. மத வெறிக்கு சாதகமாக துணை நின்று சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டேன் என அச்சக்திகளுக்கு ஜெயலலிதா துணை நிற்கிறார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவர் வற்புறுத்தியதால் தான் வாஜ்பாய் சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தந்ததாக மேடைக்கு மேடை பேசி வந்தார். தற்போது அதற்கு எதிராக ஜெயலலிதா மதவெறியைக் கிளப்பும் வகையில் பேசி வருவதை எதிர்த்துப் பேச முடியாமல் வைகோ சிக்கித் தவிக்கிறார்.

மதவெறிக்கு பின்னால் நின்று பக்க மேளம் வாசிப்பது தான் அ.தி.மு.க. வின் இன்றைய நிலை.

தமிழகத்தின் தி.மு.க. அரசு நீடிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

கடந்த ஆட்சியின் போது நானும் சி.பி.அய். மாநிலச் செயலாளர் தா. பாண்டியனும் ஜெயலலிதாவைச் சந்தித்து 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தருவது சரியல்ல என்றும், அதை நிலம் இல்லாத கூலி விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தினோம்.

அதற்கு ஜெயலலிதா, முதலில் நிலம் கேட்பீர்கள், பிறகு அதை உழுவதற்கு பணம் கேட்பீர்கள் என்று கேலி பேசினார். அப்படிப் பட்டவர் எந்த முகத்தோடு ஓட்டு கேட்க வருகிறார்?

******************************
*******************

மதுரை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராசன் பேசியது. (தீக்கதிர் - 25-6-2007)

இந்தியாவின் பெரிய பதவியான ஜனாதிபதி தேர்தலுக்கு மாதர் குலப் பிரதிநிதியாக பிரதிபா பாட்டீலை அறிவித்தபோது நாடே மகிழ்ச்சிக் கடலில் திளைத்தது. அதை எதிர்த்து தமிழ் நாட்டில் இருந்து ஒரு அவலக் குரல் - பிரதிபா பாட்டீல் தேர்வு அரசியல் ஜோக் என ஜெயலலிதா கூறினார். ஜெயலலிதா கூட்டத்தின் இந்த அகம்பாவத்திற்கு மேற்குத் தொகுதி மக்கள் சரியான அடி கொடுக்க வேண்டும்.

தேச நலன் கருதி, எடுத்த சிறந்த முடிவை அரசியல் ஜோக் என்பது அகம்பாவம். உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யச் சென்ற ஜெயலலிதா பா.ஜ.க. பற்றி வாயே திறக்க வில்லை. நாளை மதவெறிக் கூட்டத்தோடு இணைக்க ஜெயலலிதா எடுக்கும் முயற்சி தான் இது. இதை வாக்காளப் பெருமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்காலத்தில் வதந்திகளைப் பரப்புவது தேசத் துரோகம் என்று கூறப்பட்டது. தற்போது ஜெயலலிதா வதந்திகளைப் பரப்பி வருகிறார். தமிழகத்தில் குடிசைகளுக்கு பட்டா வழங்கப்படுவது குறித்து குறை சொல்ல ஜெயலலிதாவிற்கு அருகதை உள்ளதா?

************************************************************
திண்டுக்கல் கூட்டத்தில் என். வரதராசன் பேச்சு. (தீக்கதிர் - 15.6.2006)

ரூபாய் இரண்டுக்கு ஒரு கிலோ அரிசி வழங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அ.தி.மு.க. வின் அராஜக ஆட்சியால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளானார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியில் நெசவுத் தொழில் சீரழிக்கப் பட்டது. தீப்பெட்டித் தொழில் நசிந்து போனது. சேலம் மாவட்டத்தில் கொலுசு தயாரிக்கும் தொழிலாளிகள் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக என்னிடம் மனு கொடுத்தார்கள். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழகம் முழுவதும் உள்ள சிறு தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாயின. சட்டமன்றத்தில் உள்ளவர்களை காட்டு மிராண்டிகள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அத்தகைய ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவு கட்டியதோடு நமது கடமை முடிந்து விடவில்லை. அவர்களை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். மதுரை தொகுதி சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் பேசியது (தீக்கதிர், 16-7-2006)

முதல்வர் கருணாநிதி உறுதியாக தொழிலாளி பக்கம் நின்று போராட்டத்தை வெற்றி அடையச் செய்ததை மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. நெய்வேலி போராட்டத்திற்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தார். ஆட்சியில் இருந்தால் ஒரு நிலை, இல்லை என்றால் ஒரு நிலை என அவர் பம்மாத்து செய்கிறார். ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களை பழிவாங்கியவர்தானே ஜெயலலிதா. ஊழியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக கருணாநிதி, என். வரதராசன், நல்லகண்ணு போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்கு தொடுத்தவர்தானே ஜெயலலிதா? அரசு சிறப்பாக நடைபெற தொழிலாளர்கள் சில நேரங்களில் கசப்பு மருந்தைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்று சொன்னவர்தானே ஜெயலலிதா.

**************************************************************

விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் டி.கே. ரெங்கராஜன் (தீக்கதிர் 4-8-2006)

ஜெயலலிதா சட்டமன்றத்தில் 2 மணி நேரம் பேசியிருக்கிறார். ஆனால் அவ்வளவு நேரம் பேசியதில் எவ்வித உருப்படியான ஆலோசனையும் இல்லை. தி.மு.க. வை தோழமைக் கட்சிகள் தவறாக வழிகாட்டுவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். கடந்தமுறை ஜெயலலி தாவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோமே, அப்போதும் இப்படித்தான் நடந்து கொண்டோமா? வண்ணத் தொலைக்காட்சி கொடுக்கவே முடியாது எனக் கூறியவர் - இப்போது அதன் அளவு பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு கால்ஷீட் கொடுப்பது போல சட்டமன்றக் கூட்டத்திற்கு வந்து போகிறார்.

**************************************************************************

சென்னை கூட்டத்தில் என். வரதராஜன் பேச்சு. (தீக்கதிர் - 13-8-2006)

தி.மு.க. அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ள மக்களுக்கான பல சிறந்த திட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் தேவையின்றி எதிர்க்கிற கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கவும் லாயக்கற்றதாக அக்கட்சி மாறியிருக்கிறது.

சிறுதாவூரில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா தங்குவதற்காக கட்டப்பட்ட பங்களா யாருக்குச் சொந்தமானது என்பதைக்கூட சொல்ல முடியாமல் தட்டுத் தடுமாறுகிறார்.

சட்டமன்றத்தில் எவ்வளவு கடுமையாக வேண்டுமானாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். கம்யூனிஸ்டுகள் தி.மு.க. அரசுக்கு ஜால்ரா போடுவதாக கூசாமல் பேசுகிறார்கள். யார் ஜால்ரா போடுவது? உள்நாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும் பன்னாட்டு பகாசூர முதலாளிகளுக்கும் ஜால்ரா போட்டது அ.தி.மு.க. ஆட்சிதான் என்பதை மக்கள் அறிவார்கள். தமிழக முதலமைச்சர் அவர்கள் ரேஷன் கடைகளில் இருந்து நல்ல அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறோம்.
கல்விக் கொள்ளைக்குத்தான் கடந்த கால ஜெயலலிதா அரசு உடந்தையாக இருந்தது.

****************************************************************


மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் என். வரதராசன் பேச்சுக்களிலிருந்து சில பகுதிகள்.


வண்டலூர் பகுதியில் துணை நகரம் அமைப்பது குறித்து அரசின் அறிவிப்பைக் கண்டித்து ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அது மிகவும் ஆரோக்கியமற்ற முறையிலும், முதலமைச்சர் கருணாநிதி மீது தனி நபர் வெறுப்பைக் காட்டுகிற முறையிலும் வெளி வந்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

துணை நகரம் சம்பந்தமான விஷயங்களை விட்டு விட்டு, இன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தினரையும், சொந்தபந்தங்களையும் குறி வைத்து வன்மத்துடன் செய்யப்பட்ட தனி நபர் தாக்குதல் நடவடிக்கையாகும்.

ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறை, காழ்ப்புணர்ச்சியாகவும், அருவருக்கத் தக்க வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தக் கூடிய விவாதமாகவும் மாறி சட்ட மன்றம் முடக்கப் படுவதில் சென்று முடிவடைகிறது.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு அவை நடவடிக்கைகளை குலைப்பதிலும், மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை திசைதிருப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். இது சட்டமன்ற ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கி உள்ளது. 2006 மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா அவர்களின் அராஜக மக்கள் விரோதப் போக்கிற்கு மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் புகட்டிய பாடத்தை அவர்கள் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. (தீக்கதிர்- 4-9-2006)

அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு பல்லாயிரக்கணக்கானோர் மனு செய்தனர். ஆனால் அவற்றை அந்த ஆட்சி குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. (என். வரதராசன் பேச்சு - தீக்கதிர் - 9-10-2006)


************************************************************

கம்யூனிஸ்ட்கள் குறித்து பேரவையில் ஜெயலலிதாவின் பாராட்டுகள்.

கம்யூனிஸ்டுகளால் எந்தக் காலத்திலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அதனால்தான் எங்களுடன் கூட்டணி சேர்ந்து இடங்களை வென்று விட்டு, எங்களையே சதா சர்வ காலமும் குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள் (ஜெயலலிதா - 27-3-2003)

நாங்கள் கம்யூனிஸ்ட் பக்கம் கையைக் காட்டினால்தான் அவர்கள் இந்த அவைக்கே வந்து தங்கள் கருத்துகளைக் கூற முடியும் (ஜெயலலிதா - 27-3-2003)

மார்க்சின் சித்தாந்தத்தினைப் பற்றி அந்தக் கட்சியின் உறுப்பினர் இங்கே குறிப்பிட்டார். இதனால்தான் இந்தக் கம்யூனிஸ்ட் இயக்கங்களே மக்களுக்குப் பயன்படாமல் போய்விட்டன. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இரண்டே காரியங்களைத்தான் செய்கின்றன. ஒன்று எப்போது பார்த்தாலும், எங்கே பார்த்தாலும் போராட்டம்; போராட்டம், போராட்டம்; இல்லையென்றால் பொலிட் பீரோ, செயற்குழு என்று ஒரு கூட்டம் போட்டு 3 நாட்கள், 5 நாட்கள், 7 நாட்கள் என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். இதைத் தவிர வேறு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை (ஜெயலலிதா - 8-4-2003)

மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதன் இரகசியம் - தேர்தலின் போது சுபைபபே செய்கிறார்கள். (ஜெயலலிதா - 8-4-2003)

மாண்புமிகு உறுப்பினர் தங்களுடைய கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகின்ற மேற்கு வங்காளத்தைப் பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார். இங்கே ஒரு ஆதாரத்தை மாண்புமிகு சட்டப் பேரவைத் தலைவருக்கு நான் கொடுக்க விரும்புகிறேன். இதில் மேற்கு வங்காளத்தில் பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து, சட்டசபை முன்பு போராட்டம் நடந்தது. அப்போது மறியல் செய்த ஒருவரை போலீஸ்காரர் துப்பாக்கியால் அடித்து விரட்டும் காட்சி என்று ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கோவை - மாலைமலர் பத்திரிகையிலே வெளிவந்தது. அதற்கு தலைப்பே தர்ம அடி என்று கொடுக்கப்பட்டிருக்கிறது (ஜெயலலிதா - 8-4-2003)

பசியைப் போக்குவது தான் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் என்கிறார். ஆனால் எந்தக் கம்யூனிஸ்ட் ஆட்சியிலும் சத்துணவுத்திட்டமோ, அன்னதானத்திட்டமோ இல்லை (ஜெயலலிதா - 28-4-2003)

கம்யூனிஸ்ட்கள் வெத்து வேட்டுப் போராட்டங்களை நடத்துவார்கள்; மேடையிலே முழங்குவார்கள்; ஆங்காங்கே கொடி பிடித்துக்கொண்டு நிற்பார்கள் (ஜெயலலிதா - 10-32005).

------------------- நன்றி :"முரசொலி", 4.1.2009

No comments:

Post a Comment