Search This Blog

Saturday, July 23, 2011

குற்றம் செய்த அதிமுகவினருக்கு 'பாலாபிஷேகம்' செய்யும் அரசு: கருணாநிதி

அ.தி.மு.கவினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கும் போதே அவர்களுக்கெல்லாம் 'பாலாபிஷேகம்' செய்துவிட்டு, தி.மு.கவினரை மாத்திரம் பயமுறுத்துவது என்ன நியாயம்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி விவரம்:

கேள்வி: சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை வழங்க மறுத்ததோடு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறதே?

பதில்: அந்த வழக்கினை 26ம் தேதி இறுதியாக விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது சமச்சீர் கல்விக்குச் சாதகமாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி வருகின்ற தீர்ப்புக்கு வரவேற்பும் வாழ்த்தும் கூற வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

கேள்வி: ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டதே?

பதில்: மகிழ்ச்சி.


கேள்வி: அ.தி.மு.க. அரசு பொய் வழக்குகள் போடுவதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 1ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறீர்களே?

பதில்: நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், வேண்டுமென்றே, கட்சியைப் பலவீனப்படுத்தவும், கழக தோழர்களைப் பயமுறுத்தவும், பொது மக்களிடையே பீதியை உண்டாக்கவும் முயற்சி செய்யாதீர்கள் என்று நான் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கிறேன்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக இதில் கட்சி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஆனால் அ.தி.மு.க.வினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கும் போதே அவர்களுக்கெல்லாம் 'பாலாபிஷேகம்' செய்துவிட்டு - தி.மு.கவினரை மாத்திரம் பயமுறுத்துவது என்ன நியாயம்?

கேள்வி: கோவை பொதுக் குழுவில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளது?

பதில்: இதுபோன்ற விஷயங்களும் விவாதிக்கப்படும். இதையெல்லாம் எப்படி தி.மு.க. சந்திப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கேள்வி: தி.மு.க. ஆட்சியில் தியாகராய நகர் போன்ற பகுதிகளில் பல கட்டிடங்களுக்கு விதிகளை மீறி சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத்திருப்பதாகவும், அதனால் அவைகளையெல்லாம் இடிக்கப் போவதாகவும் சொல்கிறார்களே?

பதில்: அப்படி ஏதாவது நடைபெற்றிருந்தால், அவைகளைச் சட்டப்படி சுட்டிக் காட்டினால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

கேள்வி: நித்தயானந்தா சாமியார் அந்தரத்தில் பறக்க வைக்கப் போவதாக தெரிவித்தது, பகுத்தறிவாளர்களையெல்லாம் முகம் சுளிக்க வைத்திருக்கிறதே?

பதில்: எந்தச் சாமியார்களுடைய லீலைகளும், அற்புதங்களும்- தி.மு.கவின் பகுத்தறிவு கொள்கைக்கு ஏற்புடையதல்ல. அதற்காக அந்த சாமியார்களின் மீதோ, துறவிகளின் மீதோ தனிப்பட்ட முறையில் தி.மு.க. எத்தகைய தாக்குதலையும் நடத்தியதில்லை.

செவிடன் காதில் ஊதிய சங்கு-கி.வீரமணி:

இந் நிலையில் தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்து, பிள்ளைகளின்- பள்ளி மாணவர்களின் கல்வியைப் பாழாக்காமல், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த அத்தனைக் கட்சிகளும், தலைவர்களும், கல்வியாளர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் விடுத்த வேண்டுகோள் தமிழக அரசுக்குச் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டது.

மீறிச் சென்று தடை ஆணை கோரியதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. தமிழக அரசு காலதாமதம் இனியும் செய்யாமல், பள்ளிக்கூடங்களை, பாடங்கள் நடத்தும் கூடங்களாகச் செய்து, உடனடியாக ஏற்கெனவே அச்சிடப்பட்ட சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்கி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கவலையைப் போக்கிப் பொறுப்புணர்ச்சியோடு தமிழக அரசு கடமையாற்ற முன்வரவேண்டும். இனிமேலும் இதை கவுரப் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்! நியாயம் கிட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment