Search This Blog

Thursday, June 9, 2011

ஊழல் ஒழிப்பு: 1973 ஆம் ஆண்டே தி.மு.க. அரசு சட்டம் நிறைவேற்றியிருக்கிறது

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் விடுத்துள்ள கடிதம் வருமாறு:

வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்தையெல்லாம் எப்படி யாவது மீட்டு அந்தப் பணத்தை இந்தியாவின் வளத்திற்காகத் திரும்பக் கொண்டு வர வேண்டும், அதற்காக ஓர் அவசரச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், பறிமுதல் செய்யப்படும் பணத்தை தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும் என்றும்,

ஊழல்வாதிகள் குறித்து விசாரிக்க விரைவு நீதி மன்றங்கள் அமைக்க வேண்டும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து; ஜூன் 4ஆம் தேதிமுதல் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போகிறேன், யார் சொன்னாலும் அந்த முடி விலிருந்து விலகமாட்டேன் என்று தன்னைச் சமாதானப்படுத்த வந்த மத்திய அமைச்சர்களிடம் யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.

ஊழலுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி சில நாள்களுக்கு முன்பு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே அவர்கள் உண்ணா விரதம் தொடங்கியபோது, நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக பெரியதோர் எழுச்சி ஏற்பட்டது. அது போன்றதொரு நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க பாபா ராம்தேவ் அவர்களது அறிவிப்பினை யொட்டி மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற் கொண்டது.

இன்னும் சொல்லப்போனால் இதற்கு முன்னர் நடந்திராத வகையில், பாபா ராம் தேவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் தலைமையில் நான்கு அமைச்சர்கள் குழுவினர் டில்லி விமான நிலையத்திற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதன் பின்னரும் தனது உண்ணாவிர தத்தை கைவிடப் போவதில்லை என்று ராம்தேவ் அறிவித்தார். அரசுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது.

ராம்தேவ் பிரச்சினையை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ் உயர் நிலைக் குழுக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் 2-6-2011 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோணி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

அண்ணா ஹசாரே அவர்களின் கோரிக்கை யினை நிறைவேற்றிடும் வகையில், லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் கூட்டம் அதன் தலைவரும், நிதி அமைச்சருமான பிரணாப் முகர்ஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது,

லோக் பால் வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.க் களைக் கொண்டு வருவது குறித்து ஆலோசிக் கப்பட்டது. அப்போது லோக்பால் வரம்புக்குள் இவர்களைக் கொண்டுவர அந்தக் குழுவிலே பொதுமக்கள் சார்பில் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தபோதிலும், மத்திய அரசின் சார்பில் இடம் பெற்றிருந்த பிரதிநிதிகள் எதிர்த்திருக்கிறார்கள்.

ராம்தேவ் அவர்களின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்த ஹசாரே, லோக்பால் சட்டத்தை மக்களவையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஏப்ரலில் உண்ணாவிரதம் இருந்தபோது, பிரதமரை யும் லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு சம்மதித்ததாகவும், ஆனால் தற்போது அந்த வாக்குறுதியில் இருந்து அரசு பின்வாங்கி விட்ட தாகவும் கூறியிருக்கிறார். லோக்பால் சட் டத்தில் பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உட்படுத்தக்கூடாது என்ற அரசின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ராம்தேவ், பிறகுதான் அவ்வாறு சொல்லவில்லை என்று முரண்பட் டிருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இதைப்பற்றி கருத்து தெரிவித்த போது, ராம்தேவ் ஒரு சன்யாசியே அல்ல, அவர் ஒரு வியாபாரி, யோகாசனம் கற்றுக் கொடுப் பதற்காக அவர் அதிகக் கட்டணம் வசூலிக்கிறார் என்றெல்லாம் குறிப்பிட்டார்.

லோக்பால் வரைவு மசோதா குறித்து அனைத்து மாநில முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி, அவர்களின் கருத்துகளைக் கேட் டுள்ளது. 4-6-2011 அன்று செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் திரு. கபில் சிபல் அவர்கள் கூறும்போது, கறுப்புப் பணத்தை தேசிய சொத்து என அறிவிக்க, மத்திய அரசு ஒப்புக் கொண்டு உள்ளது; சட்டப்படி ஒரு குழு அமைத்து கறுப்புப் பணத்தை முழுமையாகக் கண்டறிய நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது;

ஆனால் இது தொடர்பாக சட்டம் இயற்றுவதில் அரசு உறுதியாக இல்லை என்றார்.

இதைப்பற்றி ராம்தேவ் தனது அதிருப்தியைத் தெரிவித்து, மத்திய அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டுமென்றார். இல்லாவிட்டால் உண்ணா விரதத்தைத் தொடரு வேன் என்றார். பாபா ராம் தேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., உள்ளிட்ட அமைப்புகளின் சார்பாகவும் சாத்வி ரிதம்பரா அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு ஹசாரே, குரு பாபா ராம் தேவ் போன்றவர்கள் இப்போது கறுப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் எதிராக போர் தொடுக்கின்ற நேரத்தில் எனது நினைவு 1970-களுக்குச் செல்கிறது. அப்போது லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் பொது வாழ்வில் இருப்போர் தூய்மை யாக இருக்க வேண்டும் என்றும், தூய்மையைக் கெடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குரல் கொடுத்தபோது, தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த நான் அந்தக் கருத்தை வரவேற்று அறிக்கை கொடுத்தேன்.

அது மாத்திர மல்ல; திராவிட முன்னேற்றக் கழக அரசில் 1973ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதியன்று தமிழகச் சட்டப்பேரவையில் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மசோதாவுக்குப் பெயரே, பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு மசோதா என்பதாகும்.

இந்தச் சட்டத்தின்படி பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீது சாட்டப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். அவருக்கு உதவியாக தேவைப்பட்டால் கூடுதல் கமிஷனர்கள் நியமிக்கப்படுவார்கள். கூடுதல் கமிஷனர்களாக நியமிக்கப்படுவோர் மாவட்ட நீதிபதி அஸ்தஸ்தில் உள்ளவர்களாக இருப்பார்கள்.

இதன்படி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால் பொது வாழ்வில் ஈடுபட்ட அவருக்கு ஏழு ஆண்டுக் காலம் வரை சிறை தண்டனை விதிக்க மசோதா வகை செய்யும். பொதுவாழ்வில் ஈடுபட்ட வர் மீது சாட்டப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு பொய்யானவை என்று விசாரணைக்குப் பிறகு முடிவானால் அவ்வாறு பொய்யான குற்றம் சுமத்தியவருக்கு மூன்றாண்டு காலம்வரை சிறை தண்டனை விதிக்கலாம்.

இந்த சட்டத்தின் முக்கிய கூறு என்னவென்றால், பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்று கூறும்போது முதல் அமைச்சர், முன்னாள் முதல் அமைச்சர், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சட்டப் பேரவை, மேலவை முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், முன்னாள் மேயர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், மாநகராட்சி முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் அடங்குவர்.

இந்த மசோதாவை அறிமுகம் செய்தபிறகு அதுபற்றி ஆய்வு செய்வதற்காக பொறுக்குக் குழுவிற்கு மசோதா அனுப்பப்பட்டது.

இந்த மசோதாவை அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் அப்போது கறுப்பு மசோதா என்று வர்ணித்தார். அவர் அவ்வாறு கருத்து தெரிவித்த போதும், அப்போது தமிழகத்திற்கு வந்த அன்றைய ஜன சங்கத் தலைவர், எல்.கே. அத்வானி அவர்கள் அந்த மசோதா பற்றிக் கூறும்போது, தமிழ்நாடு அரசின் ஊழல் ஒழிப்பு மசோதா பற்றிய கொள்கையை வரவேற்கிறேன்.

ஊழல் பிரச்சினை மாநில மட்டத்திலேயே தீர்க்கப்பட வேண்டும். மத்திய அரசு இதனை மேற்கொள்ளக்கூடாது. இந்த மசோதா வரம்பிற்குள் முதல் அமைச்சரும் சேர்க்கப் பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். மத்திய சர்க்காரின் லோக்பால், லோக் அயுக்த் மசோதா வரம்புக்குள் பிரதமர் சேர்க்கப்படவில்லை என்று கூறினார்.

21-2-1973 தேதியிட்ட இந்து நாளிதழில், எம்.ஏ. சதானந்த் அவர்கள் அந்த சட்டம் பற்றி எழுதும் போது, எல்லாவற்றுக்கும் வழி காட்டும் தமிழ்நாடு, இந்த வகையிலும் அகில இந்தியாவிற்கும் வழிகாட்டி உள்ளது. நடைமுறைக்கேற்ற நல்ல சட்டங்களைக் கொணர்வதில் தமிழகம் எப்பொழுதுமே முன்னோடியாக இருந்திருக்கிறது. அந்த வகையில் இந்த மசோதாவும் ஒரு முன் னோடியாகும்.

ஒரு ஜனநாயக அமைப்பில், அறிவு பூர்வமான கருத்துகள் எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும் அவை வரவேற்கப்பட வேண்டியவை. அந்த வகையில் மிகச் சிந்தனைத் தெளிவோடு இந்த மசோதா வந்துள்ளது. நடைமுறைக்கேற்ற நியாய மான ஒரு மசோதாவைத் தாக்கல் செய்யக் காரண மாக இருந்தவர்களைப் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மூதறிஞர் ராஜாஜி அவர்கள் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்ததும் சுதந்திரா கட்சியைச் சேர்ந்தது மான சுயராஜ்யா வார இதழில் அதன் ஆசிரியர் திரு. க. சந்தானம் அவர்கள் இந்தச் சட்டம் குறித்து அப்போது எழுதிய கட்டுரையில், தமிழகச் சட்ட மன்றத்தின் கடந்த கூட்டத்தில் கொண்டு வரப் பட்டுள்ள ஊழல் விசாரணை சட்டம் தீவிரமான தும் நெடுநோக்குடையதுமாகும்.

ஆனால் என்னை வியப்பில் ஆழ்த்தியது என்னவெனில், எம்.ஜி. ராமச்சந்திரனும் வேறு சிலரும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதானது ஏதோ ஊழலை மறைப்பதற்கென்றே செய்யப்பட்ட மாக்கியவல்லி நடவடிக்கை என்பதாக எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டதாகும்.

அவர்கள் இந்தச் சட்ட நகலை உன்னிப்பாகப் பரிசீலித்தார்களா அல்லது புரிந்து கொண்டார்களா என்று நான் அய்யுறுகிறேன். 1969ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை முன் கொண்டுவரப்பட்டு பின்னர் என்ன காரணத் தாலோ மாநிலங்களவை முன் கொண்டு வரப்படா மல் காலாவதியாகும்படி விடப்பட்ட லோக்பால், லோக்அயுக்த் சட்ட நகலோடு தமிழக சட்ட நகலை அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

மத்திய சட்ட வரைவைக் காட்டிலும் சில வகைகளில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட வரைவு சிறப்புடையதாகும். லோக் பால் மசோதா பிரதம மந்திரிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதன் வரம்பிலிருந்து விலக்களித்தது.

தமிழகச் சட்டமோ முதல் அமைச்சர், அமைச்சர்கள், சட்டப் பேரவை, மேலவை ஆகியவற்றின் உறுப்பினர் களையும் அதன் வரம்புக்குள் சேர்த்துள்ளது. சட்டத்தில் சாத்தியமான அளவுக்கு நீதிபதிகளை நியமிப்பதற்கான ஏற்பாடு சிறப்பாகச் செய்யப் பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைவு பிற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு முன் மாதிரியாக விளங்கும் என்று எழுதியிருந்தார்.

1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி யன்று அந்த மசோதா தமிழகத்தின் இரண்டு சபை களிலும் நிறைவேறியது. அப்போது சட்ட அமைச்சராக இருந்த நண்பர் செ. மாதவன் அந்தச் சட்டத்தை முன் மொழிந்து பேசினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் பேசிய பிறகு, அந்தச் சட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டு நான்தான் அன்றைக்கு உரை யாற்றினேன். அது இன்றளவும் அவை நடவடிக்கை குறிப்பிலே இடம் பெற்றுள்ளது.

அந்தச் சட்டத்தை முழுமையாகப் படித்துப் பார்த்த லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் கழக அரசைப் பாராட்டியதோடு தனது முழுப் புரட்சி இயக்க மான ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு இந்தச் சட்டம் உதவி புரியும் என்று கூறினார்.

கழக அரசு நிறைவேற்றிய இந்தச் சட்டத்தின் அடிப்படையில் நீதிபதி வெங்கடாத்திரி அவர்கள் ஊழல் குறித்து வரக்கூடிய புகார்களை விசாரிப்ப தற்காக தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட் டார்.

கழக ஆட்சிக்குப் பிறகு வந்த அ.தி.மு.க. வினர் அந்தச் சட்டத்தையே திரும்பப் பெற்று விட்டார்கள்.

லோக்பால், லோக் அயுக்த், ஊழல் எதிர்ப்பு, உண்ணா விரதம் என்றெல்லாம் பேசப்படுகின்ற இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு 1973ஆம் ஆண்டு நிறைவேற்றிய இந்தச் சட்டத்தைப் பற்றி உனக்கும் உலகத்திற்கும் நினைவூட்ட விரும் பினேன். அதன் விளைவாகத் தான் இந்தக் கடிதம்.

அன்புள்ள,
மு.க

No comments:

Post a Comment