Search This Blog

Monday, February 14, 2011

சட்டப்பேரவையில் ஜெயலலிதா - ஓய்வு பற்றி தீர்மானம் அம்பலப்படுத்தினார் முதல் அமைச்சர் கலைஞர்

எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லையென்றும், சட்டப்பேரவையில் பங்கு கொள்வதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததற்கான பின்னணி பற்றி முதல் அமைச்சர் கலைஞர் அம்பலப்படுத்தினார்.

பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த நிருவாகிகள் தி.மு.க.வில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. விழாவிற்கு முதல்-அமைச்சர் கலைஞர் முன்னிலை வகித்தார். துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் வர வேற்று பேசினார். இலக்கிய அணி முன்னாள் தலை வர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தலைமையில் பாரதீய ஜனதாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பேர் முதல்-அமைச்சர் கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

தி.மு.க.வில் இணைந்தவர்களை வாழ்த்தி முதல்-அமைச்சர் கலைஞர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இங்கே காசி முத்துமாணிக்கம் பேசும்போது, "பலமுறை தலைவரிடத்திலும், மற்றும் கழக முன்னணியினரிடத்திலும் நாங்கள் கோரிக்கை வைத்து - இன்றுதான் அது நிறைவேறி இருக்கிறது'' என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத் தினார். நாங்களும்; உங்களுடைய வருகையை நீண்டகாலமாக எதிர்பார்த்து அது இன்றைக்குத் தான் நிறைவேறியிருக்கிறது என்ற மகிழ்ச்சியோடு - அண்ணா அறிவாலயத்திலே உங்களையெல்லாம் சந்திக்கின்ற இந்த இனிய வாய்ப்பை - அரிய வாய்ப்பை நானும், நம்முடைய பேராசிரியரும் மற்றுமுள்ள கழக முன்னணியினரும், நிருவாகி களும் பெற்றிருக்கிறோம்.

இப்படி பல நிகழ்வுகள், பல நேரங்களிலே திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை யிலே நடந்திருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் மேலாக இங்கே வந்து சேர்வதற்கு முன்பே, இணைவதற்கு முன்பே - வேறு இயக்கத்திலே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டாலும், தி.மு.க.வில் இருப்பதைப்போலவே, நம்முடைய காசி முத்துமாணிக்கம் அவர்கள் எங்களிடத்திலே பழகியிருக்கின்றார். அதனால்தான் அவர் இன் றைக்கு வந்து சேர்ந்தபோது, புதிதாக யாரோ ஒருவர் இங்கு வந்து சேர்வதைப் போல் எங்களுக்குத் தெரியவில்லை. இங்கே இருப்பவர்தான்-அங்கே போய் இங்கே வந்து சேருகிறார் என்ற அந்த உணர்வுதான் எனக்கு-முத்துமாணிக்கத்தை பொறுத் தவரையில் ஏற்படுகிறது.

இந்த ஆட்சி ஒரு ஜனநாயக ஆட்சி என்ற நிலையில் பாராட்டுகளைப்பெற்று, சிறப்புகளை பெற்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில், இதை இழந்தவர்கள்-இந்தப் பொறுப்பைப் பெற முடியாமல் ஒதுங்கி நின்றவர்கள்-விலகி நின்றவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள்-மக்களால் ஒதுக்கப் பட்டவர்கள் -மீண்டும் இந்த ஆட்சியைப் பிடிப் போம் என்று முழங்கிக்கொண்டு- "ஆட்சியைப் பிடிப்போம்'' என்றால், ஏதோ தவறுதலாக, கொள்கைக்கு மாறாக-அண்ணா உருவாக்கிய லட்சி யங்களுக்கு எதிராக ஒரு ஆட்சி நடைபெறுவதைப் போலவும், அதை மாற்றி மீண்டும் அண்ணா வினுடைய லட்சியங்களை-அவருடைய கருத்து களை கொண்ட ஒரு ஆட்சியை அமைக்கப்போவ தாகவும் இன்றைக்கு ஒரு நாடகத்தை, ஒரு கூத்தினை நாட்டிலே நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்றுவரையிலே கூட, இந்த ஆட்சியை நாம் நீடித்து நடத்த இருக்கிறோமா-அதற்கு மக்களு டைய ஆதரவு தொடருகிறதா என்ற வகையிலே-சட்டப்பேரவையில் விவாதமே நடந்து முடிந் திருக்கிறது. கடந்த 7, 8 நாட்களாக நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்கின்ற வகையில், நம்முடைய நிதியமைச்சர்- அவை முன்னவர் பேராசிரியர் அவர்கள்-பல வாதங்களுக்கு பதில் கூறி நேற்று நிறைவுரை ஆற்றினார்கள். அதற்கு முன்பு இறுதியாக பேசிய இன்றைய எதிர்க்கட்சியினுடைய துணைத்தலைவர் நண்பர் பன்னீர்செல்வம் அவர்கள் பேசும்போது, "நீங்கள் எல்லாம் வீட்டிற்குப்போகிற காலம் வந்துவிட்டது-நாங்கள் அந்த இடத்திலே வந்து அமரப்போகிற நேரம் வந்து விட்டது-எங்கள் அம்மா முதலமைச்சராக வந்து அமருவார்''-என்றெல்லாம் சொல்லி, தன்னுடைய கருத்தை வலியுறுத்திப் பேசினார்.

பேராசிரியர் பதில் சொல்லும்போது சொன்னார்-"மிக வேகமாக, மிக ஆணித்தரமாக பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய கருத்துகளையெல்லாம் இங்கே எடுத்துச்சொல்லி, நாங்கள்தான் ஆட்சியிலே வந்து அமரப்போகிறோம் என்று நாற்காலிகளை யெல்லாம் காட்டிப்பேசினார். ஆனால், அவருக்கு நான் சொல்வேன். அவருடைய எண்ணம் ஈடேறாது என்பதை நான் எப்படி விளக்குகிறேன் என்றால்..'' என்று கூறிவிட்டு-பேராசிரியர் அவர்கள் அவருக்கே உரிய நகைச்சுவையோடு அல்ல-பொறுப்புணர்ச் சியோடு சொன்னார். "நீங்கள் யார் வேண்டு மானாலும் அமரலாம்-அம்மா வந்து முதலமைச் சராக உட்காருவார் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் சொன்னார்-ஆனால், அம்மா இப்பொழுது ஓய்விலே இருப்பதாக நமக்குக் கடிதம் அனுப்பி யிருக்கிறார்'' என்று சொன்னார்-அவ்வளவுதான். "அம்மா ஓய்விலே இருக்கிறார்'' என்று சொன்னார்.

அதென்ன பரிபூரண ஓய்வு?

இதைச்சொன்னால் என்ன தப்பு? வந்ததே பார் பன்னீர்செல்வத்திற்கு ஆத்திரம்! அவருக்கு பக்கத்திலே இருந்தவருக்கு வந்தது அதைவிட அதிகமாக ஆத்திரம்! இவர் எரிமலையாக பொங்கினார் என்றால், அவர்கள் எல்லாம் பூகம்பமாக வெடித்து-"எப்படிச்சொல்லலாம் ஓய்விலே இருக்கிறார்?'' என்று கேட்டனர்.

உடனே நான் எழுந்துகூட அல்ல; அமர்ந்த படியே சொன்னேன். ஒரு கடிதத்தைக்காட்டி, "நேற்றைக்கு நீங்கள் சட்டமன்றத்திலே அளித்து, ஒரு தீர்மானம் என்ற பெயரிலே அதை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டீர்களே? அதிலே இருக்கிறது-உங்கள் அம்மா உடல் நலமில்லாமல், ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்-அவருக்கு பரிபூரண ஓய்வு தேவை என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்'' என்று எழுதப்பட்ட கடிதத்தைப் படித்துக்காட்டச் சொன்னேன்.

அதைக் கடிதம் என்றுகூடச் சொல்லமுடியாது. பேராசிரியர் குறிப்பிடுவதைப்போல, அந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று பன்னீர் செல்வம் கொடுத்த தீர்மானம் அது. "உடல்நலம் சரியில்லை-பரிபூரண ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்'' என்ற அந்த தீர்மானம். "ஓய்வு'' என்றால் உங்களுக்குத் தெரியும். அது என்ன "பரிபூரண ஓய்வு?'' நான் அந்த விளக்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை. பரிபூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்றும், அதற்கு இந்த அவையினுடைய ஒப்புதலை அதற்குப் பெற்றுத்தர வேண்டும் என்றும் அவரே சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதி, இன்றைக்கு வர முடியவில்லை என்று சொல்லியிருக்கலாம். அதை ஏன் தீர்மானமாக அவையிலே நிறைவேற்ற வேண்டும் என்று பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். அதை தீர்மானமாக நிறைவேற்றுங்கள் என்று சபாநாயகரிடம் சொன்னேன். அதன்படி, அன்றைக்கு அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அந்த அம்மையார் அவைக்கு வரவில்லை. எவ்வளவு புத்திசாலித்தனமாக- எவ்வளவு அறிவுக்கூர்மை யோடு-எவ்வளவு தந்திரத்தோடு அந்த கடிதம் கொடுக்கப்பட்டது என்பது பிறகுதான் எங்களுக்கு புரிந்தது.

பெங்களூருவில் அந்த அம்மையார் மீது ஒரு வழக்கு நடைபெறுவது உங்களுக்குத் தெரியும். வருமானத்திற்கு மீறி-அளவுக்கு மீறி சொத்து சேர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட 70, 80 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருக்கிறார் என்று ஒரு வழக்கு நடைபெறுகிறது. அந்த வழக்கைப்போட்டு 15 வருடத்திற்கும் மேலாகிறது. 15 வருடங்களாக வாய்தா வாங்கி, வாய்தா வாங்கி-வாய்தாவிற்கும் கால் வலித்து, அலுத்துப் போய்-கடைசியாக பெங்களூர் நீதிமன்றத்தில்-ஏன் பெங்களூருவில் அந்த வழக்கு நடைபெறுகிறது என்றால், தமிழ்நாட்டில் அந்த வழக்கு போடும்போது தி.மு.க. ஆட்சியில் இருந்ததால், ஒரு வேளை நீதிபதிகளை எல்லாம் நாங்கள் பயமுறுத்தி, அந்த அம்மையாருக்கு எதிராக தீர்ப்பு வந்து விடுமோ என்று பயந்து, வேறு மாநிலத்தவரால் இந்த வழக்கு நடைபெற வேண்டுமென்று அவர்களே வலியுறுத்தி, அதன்படி பெங்களூரூவிற்கு மாற்றப்பட்ட வழக்கு-இந்த சொத்து சேர்த்த ஊழல் வழக்கு.

50 வாய்தா வாங்கிய அம்மையார்

அந்த வழக்கில் குறைந்தது 50 வாய்தா வாங்கியாகி விட்டது. இப்போது தேர்தல் வரவிருக்கிறது. தேர்தல் பிரசாரம் ஆரம்பமாக வேண்டிய கட்டம் வந்துவிட்டது. இந்த நேரத்திலே அந்த வழக்கு நடைபெற்றால், வழக்கிலே தீர்ப்பு வந்தால், இந்த அம்மையார் தேர்தலிலே நிற்க முடியுமா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு? எப்படிப்பட்ட தீர்ப்பு? என்பதையெல்லாம் நான் சொல்லமாட்டேன்-சொல்லக்கூடாது. நீதி மன்றத்திலே ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அது நீதிமன்றத்தின் முடிவைப்பொறுத்ததே தவிர, என்னுடைய கருத்தைப் பொறுத்தது அல்ல. ஆகவே, நான் அதைப்பற்றியெல்லாம் விவரமாகச் சொல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அவர்கள் கடைசியாக வாய்தாவெல் லாம் வாங்க முடியாது-இப்போது நீதிமன்றத்தில் கேள்வி கேட்கிற கட்டம் எல்லாம் வந்துவிட்டது-நீதிமன்றத்தில் கேள்வி கேட்கிறபோது, "குற்றஞ் சாற்றப்பட்ட ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு வர வேண்டும்'' என்று கண்டிப்பாக நீதிபதி சொல்லிவிட்டார்.

உடனே "இல்லை, இல்லை-எனக்கு உடம்பு சரியில்லை-வரமுடியாது'' என்று சொல்ல, அதற்கு ஆதாரமாக எங்களைத்தான் பயன்படுத்தியிருக் கிறார். நாம் எப்படியெல்லாம் பயன்பட வேண்டி யிருக்கிறது பாருங்கள். எங்களைப் பயன்படுத்தி, அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, நாங்கள் வாக்களித்து, "சரி, பாவம்-சில நாட்கள்தானே? ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும்'' என்று சொல்லப்போக, அந்தச் செய்தியை பெங்களூரு நீதிமன்றத்திலே சொல்லி-"பாருங்கள், பாருங்கள்-தமிழக சட்டப் பேரவையிலே கூட, எனக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்'' என்று எடுத்துக் காட்டி, நீதிபதியை நம்ப வைக்க முயற்சித்து, நீதிமன்றத்தில் தப்பித்து இருக்கிறார்கள்.

நேற்றைக்கு ஆஜராக வேண்டிய அந்த நிகழ்ச்சி மாற்றி வைக்கப்படக்கூடும்-அது வேறு. ஆக, "எதற்கும் பயப்பட மாட்டேன். நீதிக்கு முன்னால் நீதியை நிலைநாட்டி நிற்பேன்'' என்றெல்லாம் சொல்கின்றவர்கள், இன்றைக்கு நீதியை வளைப் பதற்கு என்னென்ன தந்திரங்கள் உண்டோ, அவை களையெல்லாம் செய்து பார்க்கிறார்கள் என்ப தற்காகத்தான் இதைச்சொன்னேனே அல்லாமல், வேறல்ல.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

திராவிட முன்னேற்றக் கழகத்திலே நீங்களெல் லாம் இன்றைக்கு இணைந்திருக்கிற இந்த நல்ல நாளில், நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள் வது, திராவிட முன்னேற்றக்கழகம் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு'' என்று அண்ணா அவர் கள் சொன்ன அந்தத் தாரக மந்திரத்தைத்தான் அடிப்படையாக வைத்து நடைபெற்றுக் கொண்டி ருக்கின்ற ஓர் இயக்கம்-இனமான இயக்கம்-இன உணர்வு இயக்கம்-"திராவிட'' என்கின்ற அந்த உணர்வை வளர்க்கின்ற இயக்கம்-தமிழ் மொழியைக் காப்பாற்றுகின்ற இயக்கம். இந்த அடிப்படை லட்சியங்களை, உணர்வுகளை மறந்துவிடாமல், என்றென்றைக்கும் இந்தக் கழகம் எடுக்கின்ற தன்மான இயக்கத்தினுடைய முடிவுகளுக்கு-தமிழை வாழ வைக்கின்ற போராட்டங்களுக்கு அனைவரும் கலந்து கொள்கின்ற அளவில் தயாராக இருக்க வேண்டுமென்று உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
- இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்.

விடுதலை

No comments:

Post a Comment