Search This Blog

Sunday, February 6, 2011

வெத்து வேட்டு பேர்வழியிடமிருந்து வேறெந்த அறிக்கையை எதிர்பார்க்க முடியும்?-கலைஞர்

இடைக்கால பட்ஜெட் குறித்த ஜெயலலிதா புகார்களுக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக, முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- இடைக்கால நிதி நிலை அறிக்கை, தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச்செல்ல வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாத ஒரு வெத்து வேட்டு அறிக்கை என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் சொல்லியிருக்கிறாரே?.

பதில்:- ஒரு "வெத்து வேட்டு'' பேர்வழியிடமிருந்து வேறெந்த அறிக்கையை எதிர்பார்க்க முடியும்?.

கேள்வி:- வழக்கத்திற்கு மாறாக, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு முற்றிலும் எதிராக, ராகுகாலத்தை மனதில் வைத்து, கேள்வி நேரத்தைப் புகுத்தி, காலை 10.30 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?.

பதில்:- அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். அங்கே கேள்வி நேரத்தை பற்றிய பேச்சே எழவில்லை. ஜெயலலிதா பேரவைக்கே வராதபோது அலுவல் ஆய்வுக்குழுவிற்கு எங்கே வந்தார்? அவரது கட்சியின் சார்பில் செங்கோட்டையனும், ஜெயக்குமாரும் அலுவல் ஆய்வு குழுவிற்கு வந்தார்கள். மேலும் அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.

ஜெயலலிதாவுடன் தோழமை கொண்டுள்ள கட்சியை சேர்ந்தவர்களும் அலுவல் ஆய்வு குழுவிற்கு வந்தார்கள். அவர்கள் யாராவது கேள்வி நேரம் எடுத்துக்கொள்வதை பற்றி அலுவல் ஆய்வுக் குழுவிலே பேசப்பட்டதா என்று கூறட்டும். பொதுவாக கேள்வி நேரத்தை ஒத்தி வைப்பது என்றால்தான் மற்ற எதிர்க்கட்சிகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்.

கேள்வி நேரத்தை வைத்துக் கொள்வதைப்பற்றி யாரிடமும் ஒப்புதல் பெறத் தேவையில்லை. 2001-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதும் கேள்வி நேரம் நடைபெற்ற பிறகுதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அது அவை நடவடிக்கை புத்தகத்திலேயே உள்ளது.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே தான் ராகுகாலம் கருதி, விடுதலை நாளன்று கோட்டையிலே கொடியேற்றும் நேரமே தள்ளி வைக்கப்பட்டது. இப்படித்தான் அவசரக் குடுக்கையாக யார் பேச்சையாவது கேட்டுக் கொண்டு ஜெயலலிதா பொய்யாக அறிக்கை கொடுப்பதும், பிறகு நாம் ஆதாரத்தோடு பதில் கொடுத்த பிறகு வாயை மூடிக் கொண்டு மவுனியாவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

கேள்வி:- 2010-2011-ம் ஆண்டிற்கான நிதிப்பற்றாக்குறை 16,222.13 கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டதாகவும், தற்போது சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கையில் நிதிப் பற்றாக்குறை 17,607.71 கோடி ரூபாய் அளவுக்கு உயருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்கிறாரே?.

பதில்:- ஒரு எதிர்க்கட்சித் தலைவர் "நுனிப்புல்'' மேயக்கூடாது. இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை புத்தகத்திலேயே பக்கம் 54-ல் "ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதாலும், அரசு செயல் படுத்திவரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான செலவு அதிகரித்திருப்பதாலும், 2010-2011-ம் ஆண்டில் ரூபாய் 17,607.71 கோடி நிதிப்பற்றாக்குறை ஏற்படும்.

பொருளாதார நிலை படிப்படியாக சீரடைந்து வருவதால் வரும் நிதியாண்டில் ரூபாய் 438.78 கோடி வருவாய் உபரி ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது. இதில் முன் பகுதியையும், பின் பகுதியையும் மறைத்துவிட்டு இடைப்பகுதியை மட்டும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார்.

மேலும் அதே பத்தியில், "வரும் நிதியாண்டிற்கான மூலதனச் செலவு குறைவாக உள்ளது. இதன் விளைவாக, நிதிப் பற்றாக்குறை ரூபாய் 13,506.84 கோடி என்ற அளவில் அதாவது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 2.32 சதவீதமாக இருக்கும். இது, பதின்மூன்றாவது நிதிக் குழு வரையறுத்துள்ள அளவுகளுக்குள் அமைந்துள்ளது'' என்றும் ஜெயலலிதா போன்ற தவறு கண்டுபிடிப்போருக்கு விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

கேள்வி:- 31-3-2011 அன்று தமிழ்நாடு அரசின் மொத்தக்கடன் 1,01,541 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதான் கருணாநிதியின் ஐந்தாண்டு கால சாதனையா என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறாரே?.

பதில்:- தமிழக அரசின் மொத்தக் கடன் பற்றி பலமுறை நான் பதில் கூறியிருக்கிறேன். ஜெயலலிதா கூறியுள்ள இந்த ரூ.1,01,541 கோடி கடன் தொகை முழுவதும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டதல்ல. ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பிலே இருந்த காலத்தில் வாங்கிய கடன்களையும் சேர்த்துத்தான் இந்தத்தொகை. எனவே அவரது "சாதனை''யையும் சேர்த்து குறிப்பிட்ட தொகை.

மேலும் ஜெயலலிதா இன்று உறவுபூண்டுள்ள கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநிலங்களிலே அந்த அரசுகள் பெற்ற கடன் தொகைகளைவிட தமிழக அரசு பெற்ற கடன் தொகை குறைவுதான். மேலும் இடைக்கால நிதி நிலை அறிக்கையிலேயே, "2006-2007 முதல் 2010-2011 வரையான ஐந்தாண்டுகளில் கடன் பொறுப்புகளின் உயர்வு ரூபாய் 44,084 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் மொத்த மூலதனச் செலவினங்கள் ரூபாய் 44,667 கோடியாக உள்ளது. இது திரட்டப்பட்ட கடன் அனைத்தும் பயன் அளிக்கக்கூடிய நோக்கங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

2005-2006-ம் ஆண்டின் இறுதியில் (ஜெயலலிதா ஆட்சியில்) மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு, 2010-2011-ம் ஆண்டு இறுதியில் 19.58 சதவீதமாகக் குறையும்'' என்று விளக்கமாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கடன் பற்றி ஜெயலலிதாவின் கூட்டணிக்கட்சி தோழரான தா.பாண்டியன் கூறி, அதற்கான பதிலை நான் 28-1-2011 தேதிய நாளேடுகளில் அளித்துள்ளேன். ஜெயலலிதா அதனைப் படித்தாவது தெளிவு பெறலாம்.

கேள்வி:- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றி குறிப்பிடாமல், விலை உயர்விற்கான காரணங்களை நிதிநிலை அறிக்கையில் பட்டியலிட்டிருப்பது வருத்தமளிக்கும் செயலாகும் என்ற ஜெயலலிதாவின் கூற்றுக்கான பதில்?.

பதில்:- நிதிநிலை அறிக்கையில் பத்திகள் 36, 37, 38 ஆகிய மூன்றும் விலைவாசியை பற்றி எழுதப்பட்டவையாகும். அதை ஒழுங்காக படித்தால், விலைவாசி உயர்விற்கான காரணங்களும் புரியும்; அதைக் கட்டுப்படுத்துவதற்காக தி.மு.க. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளும் தெரியும்.

கேள்வி:- "முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்பு தொடர்பான மேல் நடவடிக்கை குறித்து இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது, அதில் இந்த அரசுக்கு அக்கறை ஏதுமில்லை என்பதை தெளிவாக்குகின்றது என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?.

பதில்:- முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று கேரள மாநில ஆளுநர் பேசியது 4-2-2011. அது ஏடுகளில் வெளிவந்தது 5-2-2011.

அந்தச் செய்தியை 5- ம் தேதி காலையில் நான் ஏடுகளில் கண்டதும், உடனடியாக அதைக் கண்டித்ததோடு, உரிய தருணத்தில் உச்சநீதிமன்றத்தின் முன்பாக எடுத்துரைக்கப்படும் என்றும் ஒரு பத்தி எழுதி- நிதியமைச்சர், இடைக்கால நிதிநிலை அறிக்கையை அவையில் படித்து முடிக்கும் கட்டத்தில் நான் பேரவையில் கேரள அரசுக்குப் பதில் கூறி எழுதிய பத்தியையும் பேராசிரியரிடம் கொடுத்து அவரும் அதை அவையில் படித்த அந்தச் செய்தி அனைத்து ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.

ஜெயலலிதா இதையெல்லாம் படிக்காமல் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று ஜெயா அறிக்கை வெளியிடுகிறார், அதை சில ஏடுகளும் வெளியிடுகின்றனவே?.

கேள்வி:- தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, மொத்தத்தில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பல்வேறு துறைகளிலும் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்பதை பறைசாற்றுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விமர்சனம் செய்துள்ளதே?.

பதில்:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தற்போது அ.தி.மு.க.வின் நெருங்கிய கூட்டணிக்கட்சி. அவர்களிடம் தி.மு.க. அரசுக்கு மாபெரும் வெற்றி என்றா விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? தோழமைக் கட்சி உடன்பாட்டினை மீறாதவர்கள் மார்க்சிஸ்ட்கள்.

கேள்வி:- நிதிநிலை பற்றி கருத்துக்கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர், தொழிலாளர்கள் போராடுகிறபோது, தமிழக அரசு நிர்வாகத்தின் பக்கமே நிற்கிறது, தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதை தி.மு.க. அரசு தொடர்கிறது என்று சொல்லியிருக்கிறாரே?.

பதில்:- தி.மு.க.வின் தொழிற்சங்க கொள்கைகள் பற்றி இப்போதுள்ள ராமகிருஷ்ணன்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் அந்தக்கட்சியை சேர்ந்த கோவை தோழர் ரமணி, தோழர் வி.பி.சிந்தன் போன்றவர்கள் நன்கறிவார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான தேர்தலில் தி.மு.க. தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யு. சங்கத்தைவிட அதிக வாக்குகளை பெற்றதே, கழகத்தின் தொழிலாளர் உறவை நிரூபிக்குமே.

கேள்வி:- சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சித்தலைவர் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே?.

பதில்:- முன்பெல்லாம் கம்யூனிஸ்டுகள் படிக்காமல் எதையும் பேசமாட்டார்கள். இடைக்கால நிதிநிலை அறிக்கை, பத்தி 44-ல், "அனைவருக்கும் சமச்சீர் கல்வி வழங்கும் நோக்குடன் தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் 2010 ஆகிய சட்டங்கள் இந்த அரசினால் பெரும் வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சமச்சீர் கல்வி 2010-2011-ம் ஆண்டில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சமச்சீர் கல்வி முறை 2011-2012-ம் ஆண்டு முதல், மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்'' என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சமச்சீர் கல்வியை அமல்படுத்த தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறுகிறார். என்ன செய்வது? எல்லாம் "உருப்படி''களுடன் கொள்ளும் சேர்வார் தோஷம்.

கேள்வி:- இடைக்கால நிதிநிலை அறிக்கை படிப்பதற்கு முன்பு கேள்வி நேரம் எடுத்துக்கொண்டதை பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவர் பாலபாரதி, இதற்கு முன்பு அவ்வாறு நடைபெற்றதில்லை என்று சொல்கிறாரே?.

பதில்:- 29-1-2001 அன்று சட்டப்பேரவையில் 2001-2002-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை படிக்கப்பட்டது. அது படிக்கப்படுவதற்கு முன்பு பேரவையில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவையின் நிகழ்ச்சி நிரலை எடுத்துப்பார்த்தால் இதனைத் தெரிந்து கொள்ளலாம். "அவசரக்காரர்களுக்கு புத்தி மட்டு'' என்பது பழமொழி.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

source:maalaimalar

1 comment: